சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் நடப்பாண்டிலும் பி.காம் படிப்பில் சேரவே மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., பி.பி.ஏ., பி.சி.ஏ. போன்ற இளநிலை பட்டப்படிப்புகளில் உள்ள ஒரு லட்சத்து 20 ஆயிரம் இடங்களுக்கு, 2.98 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல், கடந்த 3ம் தேதி வெளியானது. இதை தொடர்ந்து 5ம் தேதி முதல் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு நடந்து வருகிறது.
இது குறித்து மாநிலக் கல்லூரி முதல்வர் ராமன் கூறுகையில், ‘‘எங்கள் கல்லூரியில் இருக்கும் 1,106 இளங்கலை பட்டப்படிப்புக்கு இடங்களுக்கு 95 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தது. இது மாநில கல்லூரி வரலாற்றில் புது சாதனை. தற்போது பி.காம் மற்றும் ஆங்கில படிப்பிற்கு சேர்க்கை முடிந்துவிட்டது. பி.காம் படிப்பை பொறுத்தவரை எப்போதுமே கடும்போட்டி இருக்கும். இந்த முறை அதிகமான கட்-ஆஃப் நிர்ணயித்து இருந்தாலும், பி.காம்., பிரிவுக்கான இடம் நிரம்பி விட்டது. அதேபோல் ஆங்கில படிப்பிற்கு தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநில மாணவர்களும் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். இந்த 2 பிரிவுகளுக்கும் சேர்க்கை முடிந்துவிட்டது. இன்று அறிவியல் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. அனைத்து பிரிவுக்குமே 3 மடங்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளது. 12ம் தேதியுடன் அனைத்து பிரிவினருக்குமான கலந்தாய்வு நிறைவடையும். அதன் பிறகு ஒரு சில இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால், 2ம் கட்ட கலந்தாய்வு வைத்து எஞ்சியுள்ள இடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.