விராலிமலை பகுதியில் சுற்றி திரியும் பன்றிகளால் நோய் பரவும் அபாயம்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

விராலிமலை: விராலிமலை பகுதிகளில் சுற்றி திரியும் பன்றிகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அம்மன் கோயில் தெரு, முத்து நகர், சிதம்பரம் கார்டன், அண்ணா நகர், பழைய பேருந்து நிலையம், தேரடி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் தற்போது சுற்றி திரியும் பன்றிகளால் தொல்லை அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் பன்றிகள் பகல் நேரங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன.

குவிந்து கிடக்கும் குப்பைகளை பன்றிகள் கிளறுவதால் துர்நாற்றம் வீசி வருவதோடு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறாக சுற்றி தெரியும் பன்றிகள் வீடுகள் முன்பு நட்டு வைத்திருக்கும் செடிகளையும் சேதப்படுத்துகின்றன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் பன்றி வளர்ப்பவர்களை அழைத்து முறையாக வளர்த்து கொள்ள அறிவுறுத்தியதோடு தெருக்களில் சுற்றி தெரியும் பன்றிகளை பிடித்து செல்லுமாறு உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக பன்றிகள் தொல்லை இல்லாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது கடந்த ஒரு வாரமாக பன்றிகள் தொல்லை தலை தூக்கத் தொடங்கியுள்ளது. பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகளில் பன்றிகள் சுற்றி வருவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவிவருகிறது. தெருக்களில் சுற்றி வரும் பன்றிகள் அவ்வப்போது சாலையோரம் தேங்கி நிற்கும் நீரில் விழுந்து பிரளுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் பன்றி வளர்ப்பவர்களை எச்சரித்து வளர்ப்பை முறைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும் என்றும்.

அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் கொட்டகை அமைத்து வளர்த்துக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்றும் குடியிருப்பு பகுதிக்குள் பன்றிகள் சுற்றி திரிவதை தடுத்து நிறுத்த ஊராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: