சென்னை: பல்வேறு புகாரின் பேரில் கடந்த ஓராண்டில் மட்டும் தனியார் கட்டுபாட்டில் உள்ள 1850 கோயிலை அறநிலையத்துறை கையகப்படுத்தியுள்ளது என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் அல்லாத 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளது. இந்த கோயில்களின் நிர்வாகம் தனிநபரோ அல்லது அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயிலில் உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம், கட்டிடங்கள், நிலங்கள் குத்தகைக்கு விடுவதன் மூலம் வருமானம் தொடர்பான கணக்குகளை ஒவ்வொரு மாதமும் அறநிலையத்துறையிடம் சமர்பிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் அவ்வாறு மாதம் தோறும் கோயில் நிர்வாகம் கணக்குகளை தாக்கல் செய்வதில்லை. மாறாக, தனியார் சிலர் அந்த கோயில்களின் வருமானத்திலோ அல்லது கோயில் சொத்துக்களையோ சுருட்டி விடுகின்றனர். இது தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.