சவாரி தகராறில் வாலிபர் கொலை; ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை: சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை:  சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் செல்வகுமார். திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. ஆட்டோ ஓட்டுநரான செல்வகுமார் ஹாரிங்டன் சாலை 11வது அவென்யூவில் உள்ள ஆட்டோவை ஸ்டேன்டில் நிறுத்துவது வழக்கம். இந்நிலையில், அதே ஸ்டேன்டில் ஆட்டோ நிறுத்தி வரும் கருணாநிதி என்பவருக்கும் செல்வகுமாருக்கும் சவாரி ஏற்றுவதில் கடந்த 2010 செப்டம்பரில் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, கடந்த 2010 செப்டம்பர் 14ம் தேதி அமைந்தகரை மாங்காளியம்மன் கோயில் அருகே செல்வகுமாரிடம் தகராறு செய்த கருணாநிதி, தான் வைத்திருந்த கத்தியால் செல்வகுமாரின் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த செல்வகுமார் மருத்துவமனை கொண்டு செல்லும்போது இறந்தார். இதையடுத்து, கருணாநிதி மீது அமைந்தகரை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். பின்னர், இந்த கொலை ஆத்திரத்தால் ஏற்பட்டது என்பதால் வழக்கு கொலைக்கு காரணமாக இருத்தல் என்ற பிரிவாக மாற்றப்பட்டது.

இந்த வழக்கு சென்னை 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதேவி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.சுரேஷ் ஆஜராகி சாட்சிகளிடம் விசாரணை நடத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள், சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் கருணாநிதிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories: