பட்டியலினத்தவர் குறித்து அவதூறு வழக்கில் ஆஜராகாத நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரன்ட்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்ட வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு 2வது முறையாக பிடிவாரன்ட் பிறப்பித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 திரைப்படத்துறையில் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக நடிகை மீரா மிதுன், அதற்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவருக்கும் ஜாமீன் கிடைத்தது.

இந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜரானார். சாட்சிகள் விசாரணை தொடங்கிய நிலையில், வழக்கின் சாட்சிகளும், வழக்கறிஞரும் ஆஜராகி இருந்தனர். ஆனால் மீரா மிதுனும், அவரது வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.

 

இதையடுத்து, சாட்சி விசாரணையன்று குற்றம் சாட்டபட்டவர் மற்றும் அவரது வழக்கறிஞர் யாரும் ஆஜராகாதது நீதிமன்றத்தை ஏமாற்றுவதாக உள்ளது என்று தெரிவித்த நீதிபதி, நடிகை மீரா மிதுனுக்கு எதிராக ஜாமீனில் இருந்து வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

 

ஏற்கனவே இதேபோல தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாததால் கடந்த மார்ச் 23ம் தேதி பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு மீரா மிதுன் கைது செய்யப்பட்டார். இப்போது, அவருக்கு இரண்டாவது முறையாக பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: