குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் டிரைவர், பயணிப்பவருக்கும் குற்றத்தில் தொடர்பு: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: குடிபோதையில் காரை ஓட்டி 3பேர் பலியான வழக்கிலிருந்து காரில் பயணித்த பெண் மருத்துவரை விடுவிக்க மறுத்த  உயர் நீதிமன்றம், ஓட்டுநர் குடித்துள்ளார் என்று தெரிந்திருந்து அதே காரில் பயணிக்கும் மற்றவர்களுக்கும் அந்த குற்றத்தில் தொடர்பு உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளது.  சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவரான அன்புசூர்யா, கடந்த 2013 நவம்பர் மாதம் நள்ளிரவு 3 மணியளவில் மெரினா கடற்கரை சாலையில் குடிபோதையில் வேகமாக காரை ஓட்டி சென்றுள்ளார். அந்த கார் மோதியதில் இரண்டு மீன் வியாபாரிகள், ஒரு தலைமை காவலர் பலியாகினர்.  

 இதுதொடர்பாக, அன்புசூர்யா மீதும், அவருடன் காரில் பயணித்த அவரது மூத்த சகோதரி டாக்டர் லட்சுமி மற்றும் நண்பர் செபஸ்டியன் கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் மீதும் சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இதையடுத்து, காரை ஓட்டாமல், பயணம் மட்டுமே செய்த நிலையில் தன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி டாக்டர் லட்சுமி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிராகரித்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்து தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

 இந்த வழக்கு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடும்போது, மனுதாரர் தனது சகோதரர் குடித்திருக்கிறார் என்று தெரிந்தும், வாகனம் ஓட்டுவதை தடுக்காமல் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததால் அவர் மீதான வழகை ரத்து செய்யக்கூடாது என்றார். இதை ஏற்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி, குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய குற்றத்தில் ஓட்டுநர் மட்டுமல்லாமல், அவருடன் பயணித்த மற்றவர்களுக்கும் சமமான பொறுப்புள்ளது. எனவே, இந்த வழக்கிலிருந்து டாக்டர் லட்சுமியை விடுவிக்க எவ்வித முகாந்திரமும் இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

Related Stories: