சேலம்: சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த இன்ஜினியர் சஞ்சய்பிரகாஷ் (24), எருமாபாளையத்தை சேர்ந்த பிசிஏ பட்டதாரி நவீன்சக்கரவர்த்தி (25) ஆகியோர், ஏற்காடு அடிவாரம் குரும்பப்பட்டி அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து யூடியூப் பார்த்து துப்பாக்கிகள் தயாரித்துள்ளனர். இவர்களையும் உடந்தையாக இருந்த அழகாபுரம் பெரியபுதூரை சேர்ந்த கபிலனையும் (25) ஓமலூர் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு சேலம் கியூ பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. இவர்களை காவலில் எடுத்து விசாரித்தபோது, தனி இயக்கம் நடத்த முடிவு செய்து யூடியூப்பை பார்த்து துப்பாக்கிகளை தயாரித்ததாகவும், மக்களை திரட்டி ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட இருந்ததாகவும் வாக்குமூலம் அளித்தனர்.