சென்னை: கனமழை எதிரொலியாக ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் அருகே உள்ள மக்களை மீட்கும் வகையில் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ஆவடி பட்டாலியன் பிரிவுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தென் மாவட்டங்களில் சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள், ஏரிகள், குளங்கள், அணைகள் நிரம்பி வழிகிறது. அதேநேரம், மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு காரணமாக சேலம் மற்றும் எடப்பாடி நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.