கொழும்பு: வவுனியா சிறையில் உள்ள 6 ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. இதனிடையே, கடந்த மாதம் 21ம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப் படகுகளில் 6 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். தலைமன்னார், தனுஷ்கோடி இடையே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, ஒரு விசைப்படகை பறிமுதல் செய்தனர். மேலும், 6 மீனவர்களை கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.