அறிவியல், தொழில் நுட்பம் வளர்ந்து விட்டதால் தமிழகம் முழுவதும் ‘தண்டோரா’ போட தடை: கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம்

சென்னை: அறிவியல், தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதால் இனியும் ‘தண்டோரா’ போட தேவையில்லை என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது: மக்களிடம் முக்கிய செய்திகளை விரைவாக சேர்க்கும் விதத்தில் இன்னும் சில ஊர்களில் ‘தண்டோரா’ போடும் பழக்கம் இருப்பதையும், அதை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப்படுவதையும் கண்டேன். அறிவியல் வளர்ந்து விட்டது, தொழில்நுட்பம் பெருகி விட்டது. இச்சூழலில் ‘தண்டோரா’ போடுவது இன்னும் தொடர வேண்டிய தேவையில்லை. ஒலிபெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி வலம் வரச் செய்வதன் மூலம் மூலை முடுக்குகளிலெல்லாம் தகவல்களை கொண்டு சேர்த்திட இயலும். எனவே, தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

Related Stories: