வீட்டின் மேற்கூரையில் ஏறி ஒயரை சரிசெய்தபோது மின்சாரம் தாக்கி பெண் பலி; மீட்க முயன்ற கணவரும் சாவு: தர்மபுரி அருகே சோகம்

தர்மபுரி: தர்மபுரி அருகே வீட்டில் மின்தடை ஏற்பட்டதால் கூரை மீது ஏறி வயரை சரி செய்த பெண் மின்சாரம் தாக்கி இறந்தார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் மின்சாரம் தாக்கி பலியானார். தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (65). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கந்தம்மாள் (58). இவர்களுக்கு 2 மகன், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. கோவிந்தசாமியின் வீட்டில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. அந்த நேரங்களில் அருகில் உள்ள மின்கம்பத்தில் இருந்து வீட்டிற்கு வரும் ஒயரை குச்சியால் அடித்து சரி செய்தனர்.

நேற்று மதியமும் இதேபோல் மின்தடை ஏற்பட்டபோது கோவிந்தசாமி வேலைக்கு சென்றிருந்த நிலையில், கந்தம்மாள் வீட்டின் மீது ஏணி மூலம் ஏறி மின்வயரை குச்சியை கொண்டு தட்டி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் வீட்டின் கூரை மீது மயங்கி கிடந்தார். மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கோவிந்தசாமி, மனைவியை காணாததால் தேடினார். அந்த நேரத்தில் மழையும் பெய்து கொண்டிருந்ததால், கந்தம்மாள் கடைக்கு சென்று விட்டு வழியில் எங்கேயாவது நிற்பார் என நினைத்தார். நீண்ட நேரமாகியும் வராததால் செல்போனில் தொடர்பு கொண்டபோது வீட்டின் மேற்பகுதியில் இருந்து ரிங்க்டோன் கேட்டுள்ளது. வெளியே வந்து பார்த்தார். கூரை மீது கந்தம்மாள் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே ஏணி வழியாக ஏறி மனைவியை மீட்க முயன்ற போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து மயங்கினார்.

அக்கம் பக்கத்தினர், இருவரையும் தேடிய போது மேற்கூரையில் மயங்கி கிடப்பது தெரியவந்தது. உடனே மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுத்து மின்இணைப்பை துண்டித்து இருவரையும் மீட்டு பார்த்தனர். இருவரும் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. தகவலின் பேரில் மகேந்திரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: