ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது

அம்பத்தூர்: ஆவடியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் இடைத்தது. அதன்பேரில், துணை கண்காணிப்பாளர் நாகராஜன் அறிவுறுத்தல்படி, இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் போலீசார் ஆவடி காமராஜர் நகர் சாலையில் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகப்படும்படி வந்த மினி லாரியை மடக்கி சோதனை நடத்தினர்.

அதில், 73 மூட்டைகளில் 3.650 டன் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. மினி லாரியில் வந்த இருவரிடம் விசாரித்தபோது, ஆவடியை சேர்ந்த டிரைவர் ஸ்டாலின் (22), மற்றும் வாசு (50) என்பதும், இவர்கள் பொதுமக்களிடம் இருந்து அரிசியை வாங்கி மொத்தமாக பதுக்கி வைத்து ஆந்திராவுக்கு கடத்தி சென்று, அங்கு கூடுதல் விலைக்கு விற்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, ரேஷன் அரிசி மற்றும் மினி வேனுடன் இருவரையும் பட்டரைவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: