மதுரை: மதுரை திருமலை நாயக்கர் மகாலில் படப்பிடிப்பு, போட்டோ ஷூட் எடுக்க நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான, மதுரை திருமலை நாயக்கர் மகால் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு நூற்றுக்கும் அதிகமான சினிமாக்கள், விளம்பரப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால், நூற்றாண்டுகள் கடந்த மகாலின் சுவர்கள், தூண்கள் சேதம் அடைவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன்பேரில் நீதிமன்றம் கடந்த 2011 முதல் திரைப்படங்கள் எடுக்க தடை விதித்தது. இதற்கிடையில் சமீபத்தில் குறும்படம் ஒன்று, திருமலை நாயக்கர் மகால் உட்பகுதியில் எந்த ஒரு அனுமதியுமின்றி எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இங்கு எடுக்கப்பட்ட காட்சியும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.