கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பல்கலை. ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்துக்கு உடனடியாக துணைவேந்தரை நியமிக்க வேண்டும். கடந்த 6 ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 7வது ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டம் தொடர்பாக கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் பாலு, காளி, கதிரவன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு சார்பில் சென்னை பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி மானிய நிதி ரூ.80 கோடி இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலை தொடர்ந்தால் பல்கலையின் கல்வி சூழல் பாதிக்கப்படும். கடந்த ஓராண்டுக்கு மேலாக துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. இதனால் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் எழுந்துள்ளன. பட்டமளிப்பு விழா 24ம் தேதி நடப்பதாக அறிவித்துள்ளனர். துணைவேந்தரின் கையெழுத்து இல்லாமல் மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டங்கள் செல்லாது. எனவே உடனடியாக துணைவேந்தரை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பல்கலை. ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: