ஒற்றை பண்பாட்டை திணித்து இந்திய ஒற்றுமையை சிதைக்க முயற்சி: ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறார்கள்; பா.ஜ மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

சென்னை: ஒற்றை மொழியை, ஒற்றை மதத்தை, ஒற்றைப் பண்பாட்டை திணிக்க நினைப்பவர்கள் இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்க நினைக்கிறார்கள். ஒன்றிய அரசின் பல்வேறு சட்டங்கள், மக்கள் விரோதச் சட்டங்களாக இருக்கின்றன. ஆளுநர்களின் மூலமாக இரட்டை ஆட்சி நடத்தப்பார்க்கிறது பாஜ தலைமை. இவை அனைத்துக்கும் இடையில்தான் மாநிலங்களில் ஆட்சி, அரசியல் நடத்தியாக வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், காணொலிக் காட்சி வாயிலாக கேரள மாநில நாளிதழ் சார்பில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசியதாவது: திருச்சூருக்கு நான் நேரில் வந்திருக்க வேண்டும். இரண்டு வாரங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால்  உடல் சோர்வு உள்ளது. வெளியூர்ப் பயணங்களை ஓரிரு வாரங்களுக்கு தவிர்க்க மருத்துவர்கள் சொல்லிய காரணத்தால் அங்கு நேரில் வர இயலவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் கண்ணூரில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தேன். அப்போது எனக்கு கேரள அரசும், மக்களும் அளித்த வரவேற்பை இன்னும் மறக்க முடியவில்லை.

இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, இந்த கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டாட்சி கருத்தியலும் - விடுதலையால் பெற்ற உரிமைகளும் - அனைத்துவிதமான வளர்ச்சிக்கான முற்போக்கு சிந்தனைகளும் இணைந்துதான் இந்தியாவை இந்தளவுக்கு வளர்த்துள்ளன. இந்தியாவின் வேற்றுமைகளை மதிக்கக் கூடியவராக இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு இருந்தார். பல்வேறு மொழி பேசும் மக்கள் ஒற்றுமையாக வாழ மொழிவாரி மாகாணங்களை உருவாக்கிக் கொடுத்தார் பிரதமர் நேரு. இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை இந்தி அவர்கள் மீது திணிக்கப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார் பிரதமர் நேரு. ஐந்தாண்டு திட்டங்களைக் கொண்டுவந்து அனைத்து மாநிலங்களுக்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கிக் கொடுத்தார். வறுமை ஒழிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தினார்.

அனைத்து மாநிலங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி தந்தார். மதச்சார்பற்ற மனிதராக அவர் இருந்தார். சகோதரத்துவத்தை வலியுறுத்தினார். நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அனைத்து தரப்பும் விவாதம் செய்யும் களமாக நாடாளுமன்றத்தை நடத்திக் காட்டினார். கூட்டாட்சி நெறிமுறைகளை அவர் அடிக்கடி பேசினார். இந்தியா முழுவதும் இருந்த பல்வேறு மாநில முதலமைச்சர்களோடு அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தினார். கடிதங்கள் எழுதினார். முதலமைச்சர்களுக்கு அவர் எழுதிய கடிதங்களே பல்வேறு தொகுப்புகளாக வெளியாகி இருக்கிறது. இத்தகைய காரணங்களால்தான் இந்தியாவானது 75 ஆண்டுகள் வலிமையோடு நின்று கொண்டு இருக்கிறது. இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு இந்தியா வலிமையாக இருக்க வேண்டுமானால் இதே கருத்தியல்களை மேலும் மேலும் வலிமைப்படுத்த வேண்டும்.

கூட்டாட்சி, மாநில தன்னாட்சி, மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம், சமூகநீதி இவற்றை நாம் வலிமைப்படுத்த வேண்டும். இவை அனைத்தையும் காப்பாற்றுவதுதான் இந்தியாவை காப்பாற்றுவது ஆகும். இந்தியா என்பது ஒற்றை அரசு அல்ல. பல்வேறு மாநில அரசுகளின் ஒன்றியம்தான் இந்திய அரசு. ஒன்றியம் - யூனியன் என்பது தவறான சொல் அல்ல. அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை வரையறுக்கப் பயன்படுத்தும் சொல் யூனியன்தான். இந்தியாவைகாப்பாற்ற வேண்டுமானால் இந்திய ஒன்றியத்துக்குள் உள்டங்கியுள்ள அனைத்து மாநிலங்களையும் காப்பாற்ற வேண்டும். மாநிலங்கள் காப்பாற்றப்பட்டால்தான் இந்தியா காப்பாற்றப்படும். தமிழ்நாட்டின் மாபெரும் அடையாளமான பேரறிஞர் அண்ணா கூறியது போல, ஒரே போல ஆக்குவது என்பது ஒற்றுமையில் இருந்து வேறுபட்டது. ஒற்றைத்தன்மையை திணிப்பதன் மூலம் ஒற்றுமையைக் கொண்டுவர முடியாது.

இந்தியாவில் எத்தனையோ மொழிகள் இருக்கின்றன, இந்தியாவுக்கு ஒற்றை மதம், அனைவர்க்குமான மதமாக இருக்க முடியாது. ஏனென்றால், இந்தியாவில் பல்வேறு மத வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. இந்தியாவில் ஒற்றைப் பண்பாடு இல்லை. உணவு, உடை அனைத்திலும் ஆயிரம் வேறுபாடுகள். இவ்வளவு வேற்றுமைகளை வைத்துக் கொண்டும் ஒன்றாக வாழ - நமக்குள் இருப்பது அன்பும் மனிதநேயமும் மட்டும்தான். ஒற்றை மொழியை - ஒற்றை மதத்தை - ஒற்றைப் பண்பாட்டை திணிக்க நினைப்பவர்கள் இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்க நினைக்கிறார்கள்.

இந்திய ஒற்றுமையைச் சிதைக்க நினைப்பவர்கள் இந்தியாவின் எதிரிகள். இந்திய மக்களின் எதிரிகள். இந்த தீய சக்திகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. வலிமையான - அதிகாரம் பொருந்திய - தன்னிறைவு பெற்றவையாக மாநிலங்கள் இருப்பது இந்தியாவுக்கு வலிமைதானே தவிர, அது பலவீனமல்ல. வலிமையான - வசதியான - தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களால் இந்தியாவுக்கு பயன்தானே தவிர, குறைவு ஏற்படாது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடாக இருப்பதால் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும்தானே நன்மை கிடைக்கிறது. ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு. தமிழ்நாட்டின் பங்கு என்பது இந்தியாவுக்குத்தானே நன்மை, மாநில அரசுகள் மிகச்சிறப்பாக மாநிலங்களை வழிநடத்துவதால் ஒன்றிய அரசு பலம் அடையுமே தவிர, பலவீனம் அடையாது. இன்னும் சொன்னால், மக்களோடு நேரடியாக தொடர்பில் இருப்பவை மாநில அரசுகள்தான்.

மக்களின் அனைத்து அன்றாடத் தேவைகளையும் பார்த்துப் பார்த்து நிறைவேற்ற வேண்டிய கடமை மாநில அரசுக்குத்தான் இருக்கிறது. எனவே, மாநில அரசுகளை தன்னிறைவு பெற்ற அரசுகளாக வைத்திருந்தால்தான் இந்தியா மகிழ்ச்சியாக இருக்கும். அதற்கு மாநிலங்கள் தன்னாட்சி உரிமை கொண்டவையாக இருக்க வேண்டும். இந்திய அரசானது கூட்டாட்சிக் கோட்பாட்டை மதித்துச் செயல்பட வேண்டும். ஆனால், அதற்கு மாறாக பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

ஒற்றைத் தன்மை கொண்டதாக இந்தியாவை மாற்றும் முயற்சியை நாம் ஏற்க முடியாது. அதனை வலிமையாக, உறுதியாக, ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். பல்வேறு சிந்தனைகள் மோதும் களமாக இருக்க வேண்டிய நாடாளுமன்றங்களில்- பேசுவதற்கான உரிமை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே மறுக்கப்படுகிறது. திமுக உறுப்பினர்கள் உள்பட 27 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். கருத்தைச் சொல்வதற்கான களமான நாடாளுமன்றத்தில்கூட பேச உரிமை இல்லை. இதுதான் இந்திய மக்களாட்சியின் இன்றைய நிலை.

சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக மாநிலங்களின் நிதி உரிமை பறிக்கப்பட்டு விட்டது. இழப்பீடாக தரப்படும் நிதி உரிய நேரத்தில் தரப்படுவது இல்லை. முழுமையாகவும் தருவது இல்லை. நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் எளியோருக்குக் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. புதிய கல்விக் கொள்கை என்பது கல்வியைப் பல்வேறு படிநிலைகளில் தடுப்பு போட்டு மறிக்கும் கொள்கையாக உள்ளது. ஒன்றிய அரசின் பல்வேறு சட்டங்கள், மக்கள் விரோதச் சட்டங்களாக இருக்கின்றன. ஆளுநர்களின் மூலமாக இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறது பாஜ தலைமை.

இவை அனைத்துக்கும் இடையில்தான் மாநிலங்களில் ஆட்சி நடத்தியாக வேண்டும். அரசியல் நடத்தியாக வேண்டும். மக்கள் தேவைகளை, எதிர்பார்ப்புகளை நிறைவு செய்தாக வேண்டும். அதற்காக நான் நம்பிக்கை இழக்கவில்லை. இந்தியாவின் மிக நீண்ட வரலாறும் - இந்திய மக்களின் சகோதர உணர்வும் -இந்தியாவை நிச்சயம் காக்கும் என்று நம்புகிறேன். 75 ஆண்டுகளுக்கு முன்னால் மாநில முதலமைச்சர்களுக்கு அன்றைய பிரதமர் நேரு கடிதம் எழுதியபோது, மிக நீண்டகால நன்மையாக இருந்தாலும், குறுகிய கால நன்மையாக இருந்தாலும் இந்தியாவுக்கு ஜனநாயகமே பொருத்தமானது. இந்தியாவுக்கு மட்டுமல்ல எந்த நாட்டுக்கும் ஜனநாயகமே பொருத்தமானது.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

* இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு இந்தியா வலிமையாக இருக்க வேண்டுமானால் கருத்தியல்களை மேலும் மேலும் வலிமைப்படுத்த வேண்டும்.

* கூட்டாட்சி, மாநில தன்னாட்சி, மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம், சமூகநீதி இவற்றை நாம் வலிமைப்படுத்த வேண்டும்.

* இந்தியா என்பது ஒற்றை அரசு அல்ல. பல்வேறு மாநில அரசுகளின் ஒன்றியம்தான் இந்திய அரசு. ஒன்றியம் - யூனியன் என்பது தவறான சொல் அல்ல.

Related Stories: