சென்னை போரூர் ராமநாதஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.13 கோடி மதிப்பிலான சொத்துக்கள் திருக்கோயில் வசம் வந்தது.!

சென்னை: சென்னை போரூர் அருள்மிகு இராமநாதஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூபாய் 13 கோடி மதிப்பிலான சொத்துக்கள் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் அறிவுறுத்தலின்பேரில் இந்து சமய  அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அதன்படி சென்னை, போரூர் அருள்மிகு இராமநாதஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூபாய் 13 கோடி மதிப்பிலான சொத்துக்கள் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. சென்னை, போரூரில் அமைந்துள்ள அருள்மிகு இராமநாதஸ்வரர்  திருக்கோயிலுக்குச் சொந்தமாக 373 கிரவுண்ட் நிலம் உள்ளது. இதனை குடியிருப்பாகவும், வணிக பயன்பாட்டிற்கும் வாடகைக்கு விடப்பட்டிருந்தது.

குன்றத்தூர் சாலையில் வணிக பயன்பாட்டுக்கு 5.5 கிரவுண்ட் மனையினை வாடகைக்கு பெற்றிருந்த 4 நபர்கள் வாடகை செலுத்தாமலும், 40 நபர்களுக்கு கடைகளாக உள்வாடகைக்கும் விட்டிருந்தார்கள். நியாய வாடகையை செலுத்தாமல் அதிக அளவு வாடகை பாக்கி வைத்திருந்ததால் இவர்கள் மீது இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தீர்ப்பின்படி இன்று (29.07.2022) காவல்துறை உதவியுடன் வருவாய் துறையினரின் முன்னிலையில் அச்சொத்து திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.13 கோடி ஆகும்.

Related Stories: