ஓசூர்: ஓசூர் மரகதாம்பிகை சந்திரசூடேஸ்வரர் கோயிலில் புதிய தேர் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஓசூரில் உள்ள பழமையான மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் தேர்த்திருவிழா மார்ச் மாதத்தில் நடைபெறுகிறது. முதலில் விநாயகர் தேரும், பின்னர் சந்திரசூடேஸ்வரர் தேரும், அதன் பின்னர் மரகதாம்பிகை தேரும் பவனி வரும். இதில் மரகதாம்பிகை தேர் கடந்த சில மாதமாக பழுதாகி இருந்தது. இதை தொடர்ந்து தேரை சீரமைக்கும் பணிகள் ஒருவாரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து தேர் கமிட்டி தலைவர் மனோகரன் கூறியதாவது:மரகதாம்பிகை தேரின் மர சிற்பங்கள் பழுதடைந்ததால், புதியதாக தேரை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 14 அடி அகலம், 14 அடி உயரம் கொண்ட இந்த தேரில் பூத கணங்கள், யாழி, தல வரலாறு சிற்பங்கள், குதிரை, யானை போன்றவை பழமை மாறாமல் செய்யப்பட்டு வருகிறது.