அவமதிப்பு வழக்கில் அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க உத்தரவு!!

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதமும்,  உதவி ஆணையர் மற்றும் இணை ஆணையர்களுக்கு தலா 50,000 ரூபாய் அபராதம் விதித்து  பிறப்பித்திருக்கிறது. சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியில் உள்ள சொக்கவேல் சுப்பிரமணியர் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு எடுத்த தனிநபர்கள் நீண்ட காலமாக வாடகை மற்றும் குத்தகை பணம் செலுத்தாமல் இருப்பதாக சொல்லி சூளையை சேர்ந்த சுகுமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக அறநிலைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறநிலைத்தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த நடவடிக்கையயை விரைவுப் படுத்த வேண்டும் என்று 2021 ஆண்டு, ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தார். ஆனால், இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று சுகுமார் உயர்நீதி மன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் அறநிலையத்துறை உதவி ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில் கோவில் சொத்தை குத்தகைக்கு எடுத்த தனிநபர் மீது விசாரணை தொடங்கி உள்ளதாகவும், வேண்டுமென்றே நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதாசுமந்த்  நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு ஏற்பட்ட காலதாமத்திற்கான காரணத்தை உதவி ஆணையர் தன்னுடைய அறிக்கையில் தெரிவிக்கவில்லை என்றும், மேலும் இந்த உத்தரவை அமல்படுத்தாததை குறித்து உதவி ஆணையர் வருத்தம் தெரிவிக்காத நடை ஏற்றுக்கொள்ளப்பட முடியாது  என்றும் கூறி இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதமும், உதவி ஆணையர் மற்றும் இணை ஆணையர்களுக்கு தலா 50,000 ரூபாய் அபராதமும்  விதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இந்த அபராத தொகையை சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு இரண்டு வாரங்களில் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.  

Related Stories: