கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்..!!

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் 5 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஆஜர்படுத்தியது. கனியாமூர் சக்தி பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி உள்பட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவி மர்மமான முறையில் கடந்த 13ம் தேதி உயிரிழந்தார்.  

ஆரம்பம் முதலே மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டி வந்தனர். பள்ளி சார்பில் சரியான பதில் அளிக்காததால் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் என மாணவியின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. பள்ளியில் உள்ள பொருட்களை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். வாகனங்களுக்கு தீ வைத்தனர். சான்றிதழும் எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். முன்னதாக மாணவியின் மர்ம மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை போலீசார் அடுத்தடுத்து கைது செயத்னர். இதையடுத்து அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 5 பேரும் 15 நாட்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே, கைதான பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் 5 பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர். அதன்படி, பள்ளி நிர்வாகிகள் இன்று விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: