தேவைப்பட்டால் கோயில் யானைகளுக்கு சிகிச்சை அளிக்க வெளி மாநிலம் அல்லது வெளி நாடுகளிலிருந்து மருத்துவர்களை வரவழைத்துவர நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு

மதுரை: மதுரை அருள்மிகு மீனாட்சி சந்தரேஸ்வரர் திருக்கோயில் வீரவசந்தராயர் மண்டபம் திருப்பணி மற்றும் கோயில் யானைக்குத் தேவையான மேல் சிகிச்சைக்கு நடவடிக்கை மற்றும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மேம்பாட்டுப்  பணிகள் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ரூ.18 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வீரவசந்தராயர் மண்டபம் திருப்பணிகள் மற்றும் கோயில் யானைக்குத் தேவையான மேல் சிகிக்சைகள் குறித்து இன்று (18.06.2021) மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வீரவசந்தராயர் மண்டபம் சில ஆண்டுகளுக்கு முன்பு தீ விபத்தினால் பாதிக்கப்பட்டு தற்பொழுது ரூ.18.10 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள் வீரவசந்தராயர் மண்டபம் கட்டுவதற்காக நாமக்கல் மாவட்ட கல்குவாரியில் கல் அறுக்கும் பணிகள் நடைபெற்று வருவதை, கொரோனா நோய்தொற்று கட்டுப்பாட்டுக்கு வந்தவுடன், அங்கிருந்து தேவையான கல் கொண்டு வரும் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என்றும், கல் அறுக்கும் பணிக்கு உபயதாரர் மூலம் ரூ.3.30 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன.  கல் அறுக்கும் இடத்திலிருந்து கல் கொண்டு வருவதற்கு மட்டும் போக்குவரத்து கட்டணமாக ரூ.2.10 கோடிக்கு ஒப்பந்தம் கோரப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. வீரவசந்தராயர் மண்டபம் கட்டுமானம் மேற்கொள்ள ஸ்தபதி பணிகளுக்கு ரூ.11.70 கோடி மதிப்பில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு பரிசீலைனையில் உள்ளதை விரைவுப்படுத்தி, அனைத்து பணிகளையும் இரண்டு ஆண்டுகளுக்குள் முடித்து குடமுழுக்கு நடைபெற விரைவாக பணியாற்றுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான யானைக்கு கடந்த ஆண்டு இடது கண்ணில் புரை தொடர்பாக பாதிப்பு ஏற்பட்டதையும், இந்த ஆண்டு வலது கண்ணில் உள்ள பாதிப்பு குறித்தும், சென்னை கால்நடை பல்கலைகழக மருத்துவக் கல்லூரி கண் மருத்துவ நிபுணர் டாக்டர் சி. ரமணி அவர்கள் தனது குழுவினருடன் 15.06.2021 அன்று வருகைதந்து கண் பாதிப்பு குறித்து மாதிரிகள் சேகரித்து சென்றுள்ளதையும், அதற்கான அறிக்கை விரைவில் பெற்று உரிய சிகிச்சை உடனடியான மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் கோயில் யானைக்கான தொடர் சிகிச்சைக்கு வெளி மாநிலம் அல்லது வெளி நாடுகளிலிருந்து சிறப்பு மருத்துவர்களை வரவழைத்து தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தொரிவித்தார். திருக்கோயில் யானைக்கான உதவி யானைப் பாகன் பணியிடம் காலியாக உள்ளதை உடனடியாக நிரப்பவும், இதேபோல் திருப்பரங்குன்றம் யானைக்கான யானைப் பாகன் மற்றும் உதவி யானைப் பாகன் பணியிடங்களையும் நிரந்தர பணியிடங்களாக தரம் உயர்த்தி பணி நியமனம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். மேலும், அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மேம்பாட்டு பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டபோது திருக்கோயிலுக்கு சொந்தமான சரவண பொய்கை தூர்வாரி மேம்படுத்தவும், சஷ்டி மண்டபம் புதியதாக கட்டவும், பக்தர்களுக்கான வாகன நிறுத்துமிட வசதி ஏற்படுத்தவும், திருக்கோயில் துணை ஆணையர் / செயல் அலுவலர் பணியிடம் விரைவில் நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாக ராஜன் அவர்கள், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. கோ.தளபதி அவர்கள், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. பூமிநாதன் அவர்கள், சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வெங்கடேசன் அவர்கள், மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில் தக்கார் திரு. கருமுத்து கண்ணன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எஸ்.அனீஷ் சேகர், இ.ஆ.ப., மதுரை மாநகராட்சி ஆணையர் டாக்டர் கே.பி.கார்த்திகேயன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் திரு.சி.குமாரதுரை, மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலர் திரு.க.செல்லதுரை, இந்து சமய அறநிலையத்துறை மண்டல செயற்பொறியாளர் திருமதி வெண்ணிலா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

The post தேவைப்பட்டால் கோயில் யானைகளுக்கு சிகிச்சை அளிக்க வெளி மாநிலம் அல்லது வெளி நாடுகளிலிருந்து மருத்துவர்களை வரவழைத்துவர நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Related Stories: