சில்மிஷம் செய்த முதியவரை சரமாரியாக தாக்கிய பெண்-தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு

தர்மபுரி : தர்மபுரி பஸ் ஸ்டாண்டிற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் குடிமகன்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் தனியாக வரும் பெண்கள் சங்கடத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம், தர்மபுரியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண், தனது குழந்தைகளுடன் கோயிலுக்கு செல்வதற்காக, பஸ் ஸ்டாண்டிற்கு வந்தார். அங்கு பென்னாகரம் செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் குழந்தைகளுடன் காத்திருந்தார்.

அந்த நேரத்தில், குடிபோதையில் அங்கு வந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர், அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், அந்த முதியவரை சரமாரியாக தாக்கினார். இதனை பார்த்த அங்கிருந்த பயணிகள் சிலர், தங்களது செல்போன்களில் அதனை வீடியோ எடுத்தனர்.

இதனிடையே, அடி தாங்க முடியாமல், அந்த பெண்ணின் பிடியில் இருந்து தப்பிய முதியவர், அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தார். இந்த சம்பவம் நடந்த போது, அதை தடுப்பதற்கோ, அல்லது அந்த பெண்ணுக்கு உதவி செய்வதற்கோ யாரும் முன்வரவில்லை. பதிலாக, சிலர் மும்முரமாக செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.

அவர்களை பார்த்து, தவறு செய்தவரை தட்டிக்கேட்காமல், இப்படி வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறீர்களே? என்று அந்த பெண் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார். இதனால், வீடியோ எடுத்த நபர்கள், அங்கிருந்து நைசாக நழுவினர். வேறு சில பெண்கள், அந்த பெண்ணின் துணிச்சலை பாராட்டினர். இந்த சம்பவத்தால் தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: