மோடி பெயரை தற்காப்புக்காக ஓபிஎஸ் பயன்படுத்துகிறார்: கடம்பூர் ராஜூ எம்எல்ஏ குற்றச்சாட்டு

கோவில்பட்டி:  பிரதமர் மோடி பெயரை ஓபிஎஸ் தற்காப்புக்காக பயன்படுத்துகிறார் என்று கடம்பூர் ராஜூ எம்எல்ஏ குற்றம் சாட்டினார்.தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ நேற்று அளித்த பேட்டி: எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய போது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தொண்டர்கள் எப்படி ஆர்வமுடன் இணைந்தார்களோ, அதே போன்ற எழுச்சியை இப்போது பார்க்க முடிகிறது. இதுதான் யதார்த்த நிலை. பொதுக்குழு உறுப்பினர்களின் 48 பேரை தவிர 2,532 பேர் ஒருமனதாக கையெழுத்திட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத்தான் நீதிமன்றமும் தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள ஆதரவை பார்த்து தான் அதிமுக தலைமை அலுவலக சாவியை நீதிமன்றமே ஒப்படைத்துள்ளது. வங்கிகளும், எடப்பாடி பழனிசாமி கொடுத்த கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. அதிமுக உள்விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று பாஜ தெளிவாக கூறிவிட்டது. பிரதமர் மோடி கூறியதால் தான் அதிமுகவில் இணைந்ததாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார். ஆனால் பிரதமர் மோடி இதுகுறித்து எந்த கருத்தும் கூறவில்லை. தற்காப்புக்காக பிரதமர் மோடி பெயரை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்திக் கொள்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: