காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் சோமஸ்கந்தர் சிலை முறைகேடு வழக்கு; சிலை தடுப்பு பிரிவில் இருந்து சிவகாஞ்சி போலீசுக்கு மாற்றம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சோமஸ்கந்தர் சிலை செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவிலிருந்து சிவகாஞ்சி போலீசுக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோமஸ்கந்தர் சிலையில் சில சேதங்கள் இருந்ததால் புதிதாக தங்க சிலை செய்யப்பட்டது. இதற்காக 100 கிலோ தங்கம் வசூலிக்கப்பட்டும், சிலையில் ஒரு சதவீதம் கூட தங்கம் இல்லை என்று கூறி  அண்ணாமலை என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிந்து விசாரிக்குமாறு சிவகாஞ்சி போலீசாருக்கு காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை அப்போதைய ஆணையர் வீர சண்முகமணி, சிலையை வடிவமைத்த ஸ்தபதி முத்தையா உள்ளிட்ட ஒன்பது பேர் மீது 2018ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை கடந்த 2019ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கூடுதல் ஆணையர் கவிதா, முத்தையா ஸ்தபதி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.  இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு, நன்கொடையாளர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ததை தவிர வேறு எந்த விசாரணையும் மேற்கொள்ளாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு மீது நம்பிக்கை வைத்து இந்த வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதித்த நிலையில், நான்கு ஆண்டுகளாக எந்த விசாரணையும் நடத்தாதது அதிருப்தி அளிக்கிறது. எனவே, இந்த வழக்கு சிவகாஞ்சி போலீசார் விசாரணைக்கு மாற்றப்படுகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்களை சிவகாஞ்சி போலீசாரிடம் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஒப்படைக்க வேண்டும். வழக்கின் விசாரணையை 90 நாட்களில் முடித்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் சிவகாஞ்சி போலீஸ் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

Related Stories: