திருவனந்தபுரம்: கேரளாவில் தனது வீட்டு நாயை குளிப்பாட்ட மறுத்த போலீஸ்காரரை எஸ்.பி சஸ்பெண்ட் செய்தார். முதல்வர் அலுவலகம் தலையிட்டதை தொடர்ந்து அவரது சஸ்பெண்ட் உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்பட்டது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் போலீஸ் தொலைத்தொடர்பு பிரிவின் எஸ்பி.யாக பணிபுரிந்து வருபவர் நவநீத் சர்மா. இவரது மனைவி ரயில்வேயில் உயரதிகாரியாக உள்ளார். இதனால், ரயில்வே குடியிருப்பில் நவநீத் சர்மா மனைவியுடன் தங்கி உள்ளார். இவருக்கு 2 பாதுகாவலர்கள் உள்ளனர். சில தினங்களுக்கு முன் இவருடைய பாதுகாவலரான ஆகாஷ் என்பவரை அவரது வீட்டு வேலைக்காரர் அழைத்து நாயை குளிப்பாட்டும்படி கூறியுள்ளார். ஆனால், தன்னுடைய வேலை அதுவல்ல என்று கூறி ஆகாஷ் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று டிவி பார்த்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வீட்டு வேலைக்காரர், நவநீத் சர்மாவுக்கு போன் செய்து விவரத்தை கூறியுள்ளார்.