கோயில்களில் திருமணங்களுக்கு அனுமதி பெற இ- சேவை மையத்தில் வழங்கப்படும் “திருமணமாகாதவர்” என்ற சான்றிதழ் போதுமானது.: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: திருக்கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கு அனுமதி பெற இ- சேவை மையத்தின் மூலம் வழங்கப்படும் “திருமணமாகாதவர்” என்ற சான்றினை சமர்பித்தால் போதுமானது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கு அனுமதி பெற இதுவரை இதர சான்றிதழ்களுடன் “முதல் திருமண சான்றும்” கோரப்பட்டு வந்தது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையானது “முதல் திருமண சான்றுக்கு” பதிலாக இ-சேவை மையங்கள் வாயிலாக வழங்கப்படும் “திருமணமாகாதவர்” என்ற சான்றினை பெற்றுக் கொள்ள தெளிவுரை வழங்கியுள்ளது.

ஆகவே, இனி வருங்காலங்களில் திருக்கோயில்களில் திருமணம் நடத்திட விரும்பும் பொதுமக்கள் “திருமணமாகாதவர்” என சான்றினை இ-சேவை மையங்கள் மூலம் பெற்று சம்பந்தப்பட்ட திருக்கோயில்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுகுறித்து திருக்கோயில்களின் அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருக்கோயில்களில் திருமணம் நடத்திட அனுமதி வழங்குவதற்கு உரிய சான்றிதழ்களை தவிர வருவாய் துறையால் வழங்கப்படாத இதர சான்றிதழ்களை கோரினால் அறநிலையத்துறையின் தலைமை அலுவலக தொலைபேசி (044-28339999) எண்ணினை தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Stories: