திருமூர்த்தி அணையில் தூர் வாரும் பணி தொடக்கம் வண்டல் மண் எடுக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி

உடுமலை : திருமூர்த்தி அணையில் தூர் வாரும் பணி தொடங்கியுள்ளது. இதனால் வண்டல் மண் எடுத்துச்செல்லும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.உடுமலை திருமூர்த்தி அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் நீர் கொண்டு செல்லப்பட்டு சேமிக்கப்படுகிறது. 60 அடி உயரம் உடைய திருமூர்த்தி அணையின் மூலம் திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாசன வசதி பெறுகின்றன. மேலும், உடுமலை நகராட்சி, பூலாங்கிணறு,  கணக்கம்பாளையம், மடத்துக்குளம், குடிமங்கலம் கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அணையை  தூர்வாரி, கூடுதல் நீரை சேமிக்கும் வகையிலும், விவசாய நிலங்களை வளமாக்கும் வகையிலும் விவசாயிகள் வண்டல் மண் அ்ளள அனுமதி வழங்கவேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.திருமூர்த்தி அணையின் கிழக்கு பகுதியில் உள்ள ஜல்லிபட்டி பெருமாள் கரடு, கோனக்கரடு பகுதியிலிருந்து விவசாயிகளிடமிருந்து அணை கட்ட கையகப்படுத்தப்பட்ட, சுமார் 300 ஏக்கர் பரப்பளவு நிலம்  வீணாக உள்ளது. எனவே, விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிப்பதோடு , அணையை தூர்வார நிதியை ஒதுக்கி, கிழக்குப்பகுதியில் பயன்படுத்தாமல் உள்ள 300 ஏக்கர் நிலத்தையும் ஆழப்படுத்த வேண்டும். மேலும் நீர்தேங்கும் பரப்பில் உள்ள மண்மேடான பகுதிகளையும் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என பிஏபி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்று அணையில் தூர் வாரி வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி அளித்தது. இதற்கு அனுமதி பெற பல்வேறு நிபந்தனைகளை மாவட்ட ஆட்சியர் விதித்ததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதைஏற்று, தற்போது விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. வண்டல் மண் எடுக்கும் விவசாயிகளுக்கான உத்தரவு தபாலில் அவர்களின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, நேற்று அணையில் தூர் வாரும் பணி தொடங்கியது. பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தூர் வாரப்பட்டு, டிப்பர் லாரியில் வண்டல் மண்ணை கொட்டி விவசாயிகளின் தோட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: