திருச்சி: திருச்சியில் மகள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காதலனை போலீசார் கைது செய்தனர். திருச்சி மேலகல்கண்டார்கோட்டை அண்ணா தெருவை சேர்ந்தவர் சையது. இவரது மனைவி சாய்தாபேகம்(35). ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 15ம்தேதி வீட்டில் சாய்தாபேகம் அலறும் சத்தம் கேட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் திரண்டபோது வீட்டின் ஓடுகளை பிரித்து கொண்டு வாலிபர் ஒருவர் அரிவாளுடன் முகத்தில் கர்ச்சீப் கட்டியபடி வெளியேறி தப்பி சென்றார். இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வெட்டு காயங்களுடன் சாய்தாபேகம் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.