புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தல் நாளை மறுதினம் நடக்க உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு, ஆம் ஆத்மி கட்சி ஆதரவு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டின் 15வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை மறுதினம் நடக்க உள்ளது. இதில், ஆளும் பாஜ கூட்டணி தரப்பில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநரான பழங்குடி பிரிவைச் சேர்ந்த திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக ஒன்றிய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில், முர்முவுக்கு பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பி, எம்எல்ஏக்கள் மட்டுமின்றி பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், அதிமுக, தெலுங்கு தேசம், சிரோண்மணி அகாலி தளம், மஜத, சிவசேனா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய மாநில கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.