நடிகர் தனுஷ் புகை பிடிக்கும் காட்சி விவகாரம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வழக்கு விசாரணைக்கு ஆஜராக விலக்கு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை மற்றும் முறைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி காட்சிகள் இடம்பெற்றுள்ளன என குற்றச்சாட்டு எழுந்தது. படத்தில் நடிகர் தனுஷ் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் வரும்போது, திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறாததால், தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் 2014ம் ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார்மீது விசாரணை மேற்கொண்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுசுக்கு எதிராக மனு தாக்கல் செய்தார். இதை விசாரணைக்கு ஏற்ற சைதாப்பேட்டை நீதிமன்றம் நாளை (இன்று) இருவரும் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரியும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணை வந்தது. அப்போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, படத்தில் புகைபிடிக்கும் காட்சிகள் வரும்போது எச்சரிக்கை வாசகங்கள் காட்சிப்படுத்தப்படுகிறது என்றார். மனுவை விசாரித்த நீதிபதி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று ஆஜராக விலக்கு அளித்து, வழக்கின் இறுதி விசாரணைக்காக ஆகஸ்ட் 10ம் தேதி தள்ளிவைத்தார். இதற்கிடையே, தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் தனுஷும் வழக்கு தொடர இருப்பதாகவும், தற்போது அவர் கிரேமேன் படப்பணிகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதால், சென்னை திரும்பிய பிறகு கையெழுத்து பெற்று, மனுத் தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதையும் சேர்த்து விசாரிக்க வேண்டுமென தனுஷ் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: