புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மெகா தேசிய சின்னம்: பிரதமர் மோடி திறப்பு

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில், பிரமாண்ட தேசிய சின்னத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் ரூ.1,250 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும், கூட்டுக் கூட்டத்திற்கு 1,272 பேர் அமரும் வகையில் கட்டப்படுகிறது.

புதிய கட்டிடத்தில், தரைத்தளம், அதன் கீழே ஒரு அடித்தளம், முதல் தளம், இரண்டாவது தளம் என மொத்தம் 4 தளங்களை கொண்டிருக்கும். இந்திய ஜனநாயகத்தின் பெருமையை உலகுக்கு எடுத்து காட்டுகிற வகையில் பெரிய அரங்கம் ஒன்று அரசியல் சாசன அரங்கம் என்ற பெயரில் அமையும். நூலகம், கட்சி அலுவலகங்கள், பல்வேறு நிலைக்குழு அலுவலகங்கள், உள்ளிட்ட பல வசதிகளை கொண்டிருக்கும்.

புதிய  கட்டிடத்தின் மேற்கூரையில் நேற்று காலை 6.5 மீட்டர் உயரமுள்ள வெண்கலத்தில் உருவான தேசிய சின்னம் ஒன்றை பிரதமர் மோடி  திறந்து வைத்தார். இதில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கலந்து கொண்டனர். இதன்பின்னர்  கட்டிட கட்டுமான பணியில் ஈடுபட்டு உள்ள பணியாளர்களுடன் சிறிது நேரம் பிரதமர் மோடி உரையாடினார். இந்நிகழ்ச்சிக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் யாரும் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: