மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து ஸ்ரீசைலம் மல்லிகார்சுனர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு..!!

சென்னை மயிலாப்பூர் அருள்மிகு  கபாலீஸ்வரர் திருக்கோயிலிருந்து ஆந்திர பிரதேசம் ஸ்ரீ சைலம் மல்லிகார்சுணர் திருக்கோயிலுக்கு வஸ்திர மரியாதை வழங்கும் நிகழ்ச்சி  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  சேகர்பாபு  தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வழிகாட்டுதலின்படி, சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலிருந்து ஆந்திர பிரதேசம் ஸ்ரீ சைலம் மல்லிகார்சுணர் திருக்கோயிலுக்கு வஸ்திர மரியாதை வழங்கும் நிகழ்ச்சி  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  சேகர்பாபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

பின்பு ஸ்ரீ சைலம் மல்லிகார்சுணர் திருக்கோயிலில் வஸ்திர மரியாதை செய்துவிட்டு சுவாமி தரிசனம் முடித்து அமைச்சர் கூறியதாவது, தமிழ்நாட்டில் இத்துறை கட்டுபாட்டில் உள்ள திருக்கோயில்களிலிருந்து பிற மாநிலங்களில் உள்ள திருக்கோயில்களுக்கு வஸ்திரங்கள் மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு நாச்சியார் திருக்கோயில் மற்றும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்களிலிருந்து திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரசுவாமி திருக்கோயிலுக்கு வஸ்திரங்கள் மரியாதை வழங்கப்பட்டு வருகின்றது.

கடந்த 2022 - 2023 ஆம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் இதர மாநிலங்களில் உள்ள திருக்கோயில்களுக்கும் தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களுக்கும் நல்லிணக்க உறவு மேம்பட தமிழகத் திருக்கோயில்களிலிருந்து இதர மாநிலத் திருக்கோயில்களுக்கு வஸ்திர மரியாதை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிலிருந்து கேரளா, சபரிமலை சாஸ்தா திருக்கோயிலுக்கும், மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலிருந்து ஆந்திரா  ஸ்ரீசைலம் ஸ்ரீ மல்லிகார்சுணர் ஆலயத்திற்கும், பண்ணாரி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலிலிருந்து  கர்நாடகம், மைசூர், சாமுண்டிஸ்வரி அம்மன் திருக்கோயிலுக்கும், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலிலிருந்து மத்தியபிரதேசம், உஜ்ஜயினி, ஸ்ரீ மகா காளேஸ்வரர் ஆலயத்திற்கும், இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலிலிருந்து உத்தரபிரதேசம், காசி, ஸ்ரீ விஸ்வநாதர் ஆலயத்திற்கும், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலிலிருந்து உத்தரகாண்ட் ஸ்ரீ கேதர்நாத் திருக்கோயிலுக்கும், திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலிலிருந்து ஒரிசா, பூரி ஜெகன்னாதர் ஆலயத்திற்கும், திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலிலிருந்து குஜராத் சோம்நாத், ஸ்ரீ சோமநாத சுவாமி திருக்கோயிலுக்கும், கன்னியாகுமரி, திருவட்டாறு, அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலிலிருந்து, திருவனந்தபுரம், ஸ்ரீபத்மநாதசுவாமி திருக்கோயிலுக்கும், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிலிருந்து கர்நாடகம், மங்களூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கும், காஞ்சிபுரம் அருள்மிகு எம்பார் திருக்கோயிலிலிருந்து கர்நாடகம் ஸ்ரீ செலுவ நாராயணப் பெருமாள் திருக்கோயிலுக்கும், சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலிலிந்து அகோபிலம் நரசிம்மர் ஆலயத்திற்கும் வஸ்திர மரியாதை வழங்குவது தொடர்பாக திருக்கோயில் பழக்க வழக்கத்தினை கருத்திற்கொண்டும் மற்றும் திருக்கோயிலில் உள்ள அர்ச்சகர்கள் / பட்டாச்சாரியார்களை கலந்தலோசித்தும் சம்பந்தப்பட்ட திருக்கோயில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு சம்மதம் பெற்று விவரம் தெரிவிக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதில் முதற்கட்டமாக சென்னை, மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலிருந்து ஆந்திர பிரதேசம் ஸ்ரீ சைலம் மல்லிகார்சுணர் திருக்கோயிலுக்கு வஸ்திர மரியாதை வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதனால் இதர மாநிலங்களில் உள்ள திருக்கோயில்களுக்கும் தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களுக்கும் நல்லிணக்க உறவு மேம்படும். இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி. சந்தரமோகன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் திரு.இரா.கண்ணன் இ.ஆ.ப., திருமதி ந.திருமகள், மயிலாப்பூர் அருள்மிகு  கபாலீஸ்வரர் திருக்கோயில் இணை ஆணையர் /செயல் அலுவலர் திருமதி த.காவேரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  

Related Stories: