கொழும்பு: இலங்கை அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்தார். இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, கடந்த 3 மாதமாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் கொழும்புவில் நேற்று முன்தினம் மக்கள் போராட்டம் உச்சகட்டமாக வெடித்து, போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையில் நுழைந்தனர். இதனால், அதிபர் கோத்தபய ராஜபக்சே உயிருக்கு பயந்து தலைமறைவாகி விட்டார். மக்களின் கோபத்தால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் பதவி விலகினார். இதன் காரணமாக, 4 அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால், இலங்கையில் அரசு நிர்வாகம் தடுமாற்றம் கண்டுள்ளது.