வேளச்சேரி: வேளச்சேரி அருகே பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் சேகர் (50). இவர் சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வேளச்சேரி பகுதியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை வேளச்சேரி, வெங்கடேஸ்வரா நகர், 3வது பிரதான சாலை சந்திப்பில் குப்பைகளை அகற்றும் பணியில் சேகர் ஈடுபட்டிருந்தார்.
அப்போது பூமிக்குள் புதைத்திருந்த மின்வயரில் கசிவு ஏற்பட்டதில், சேகர்மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்துள்ளார். அவரை சக தொழிலாளர்கள் மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே சேகர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.