காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மூன்றாவது முறையாக ஒத்திவைப்பு.: அடுத்த கூட்டத்துக்கான தேதி குறிப்பிடவில்லை

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற இருந்த கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் மூன்றாவது முறையாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக காவிரி மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஜூன் 17-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் முன்பு அறிவித்திருந்தது. அந்த கூட்டத்தில் கர்நாடக அரசின் மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது பெரும் பரபரப்பை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியது. அதன் காரணமாக தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக அரசின் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதன் காரணமாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக முதல் முறை அறிவிக்கப்பட்டது.

அதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்து கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் மேகதாது அணை குறித்த கர்நாடகத்தின் கோரிக்கையை  விவாதிக்க அனுமதி வழங்கக்கூடாது என ஜல் சக்தி துறைக்கு அறிவுறுத்தவும், தமிழகம் தொடர்ந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இருப்பதையும் அந்த கடிதத்தில் தெரிவித்து இருந்தார்.

முதல்வரின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஜூன் 23-க்கு நடைபெற இருந்த கூட்டம் ஜூலை 6-ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக தவிர்க்க முடியாத காரணங்களால் நாளை (ஜூலை 6-ம் தேதி) நடைபெற இருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: