காதல் திருமணம் செய்த 9 மாத கர்ப்பிணியான நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை: கூடுவாஞ்சேரியில் பரபரப்பு

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில் காதல் திருமணம் செய்த 9 மாத கர்ப்பிணியான நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் சஞ்சய் (21). இவருக்கும், சிங்கபெருமாள்கோவில் அடுத்த திருத்தேரி தீப்பாஞ்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பார்த்தசாரதியின் மகள் நர்சிங் மாணவியான கோடீஸ்வரி (21) என்பவருக்கும் கடந்த ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி, அம்பேத்கர் தெருவில் வாடகை வீட்டில் குடியேறினர். இதில், சஞ்சய் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். மேலும், அவரது மனைவி கோடீஸ்வரி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதில், இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில், வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.  

இதில், சஞ்சய் தனது மனைவியிடம் சண்டை போட்டு விட்டு வெளியே சென்றுள்ளார். இதனால், மனமுடைந்த கோடீஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டதும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கோடீஸ்வரியை மீட்டு கூடுவாஞ்சேரியில் உள்ள நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு, பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் கோடீஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஒரு வருடம் ஆவதால் இதுகுறித்து தாம்பரம் ஆர்டிஓ அறிவுடைநம்பியும் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும், காதல் திருமணம் செய்துகொண்ட நர்சிங் மாணவி 9 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: