சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 3.25 லட்சம் பேர் படிக்க விண்ணப்பித்துள்ளதாக கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதற்கான விண்ணப்ப பதிவு, கடந்த ஜூன் 22ம் தேதி தொடங்கியது. https://tngasa.org/, https://tngasa.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும், இ-சேவை மையம், கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் சேர இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய ஜூலை 7ம் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், விண்ணப்பதிவு தொடங்கிய கடந்த 11 நாளில் (நேற்று மாலை 5 மணி நிலவரப்படி) 3,25,904 பேர் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். இதில், 2,66,961 பேர் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்துள்ளனர். 2,35,801 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.