ஊத்துக்கோட்டை பகுதியில் துரத்தி கடிக்கும் தெரு நாய்கள்; பொதுமக்கள் அச்சம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பகுதியில் சாலைகளில் திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  இங்குள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஊத்துக்கோட்டை, பாலவாக்கம், தாராட்சி, பேரண்டூர், பனப்பாக்கம் என பல்வேறு பகுதிகளில் இருந்து படித்து வருகின்றனர்.  இந்த மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போது அவர்கள் எடுத்துச்செல்லும் புத்தக பைகளை பார்த்து நாய்கள்  குறைக்கிறது. இதனால் மாணவ - மாணவிகள் அச்சத்துடன் பள்ளிக்கு செல்கின்றனர்.

இதில் ஒரு சில  தெரு நாய்களுக்கு சொறி பிடித்து பார்ப்பபதற்கே அறுவறுப்பாக உள்ளது. மேலும் ஒரு சில நாய்கள் பைத்தியம் பிடித்து சாலையில் நடந்து செல்பவர்களை துரத்தி கடித்து விடுகிறது. இந்த தெரு நாய்கள் தொல்லையால் மாணவர்களும்,   மக்களும்  அச்சத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு நாய்களை பிடித்து அதற்கு ஊசி செலுத்தி குணமடைய வைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து நேற்று பேரூராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களும் வலியுறுத்தி கூறினர்.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, `ஊத்துக்கோட்டை பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக காணப்படுகிறது.

இதனால் நாங்கள் அச்சத்துடன் நடந்து செல்லவேண்டியுள்ளது. மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நாய் கடித்ததில் 2 பேர் இறந்துள்ளனர். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு நாய்களை பிடித்து சென்று கருத்தடை ஊசி போட்டார்கள். ஆனால் அது எந்த பலனும் அளிக்கவில்லை. அப்போது ஊத்துக்கோட்டையில் பிடித்த நாய்களை பள்ளிப்பட்டிற்கும், அங்கு பிடித்த நாய்களை ஊத்துக்கோட்டையிலும் விட்டுவிட்டனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊத்துக்கோட்டை அரசு பள்ளி எதிரிலும், திருவள்ளூர் சாலை, பஸ் நிலையம் பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும்’ என கூறினர்.

Related Stories: