ஓபிஎஸ் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி நிராகரித்ததால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் சுயேச்சையாக போட்டி; கட்சி தொண்டர்கள் கடும் அதிருப்தி

சென்னை: ஒற்றை தலைமை விவ காரம் காரணமாக பி படிவம், அதிமுக வேட் பாளர்களுக்கு தராததால், கட்சி வேட் பாளர்கள் உள்ளாட்சி இடைத்தேர்தலில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த மாதம் 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக 2 மாவட்ட கவுன்சிலர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி கவுன்சிலர்கள், 2 நகராட்சி கவுன்சிலர்கள், 8 பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த பதவிகளுக்கான வேட்புமனு தாக்கலுக்கு கடந்த 27ம் தேதி கடைசி நாள்.

அதன்படி அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் பலரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அந்தந்த கட்சிகளின் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய ஏ மற்றும் பி என்ற இரண்டு படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவங்களில் அந்தந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள் கையெழுத்து போட வேண்டும். அதிமுகவில் இருந்து பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்ட பின்னர் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இந்த படிவங்களில் கையெழுத்திட்டு வந்தனர்.

தற்போது, அதிமுக உட்கட்சி பிரச்னையால் ஒருங்கிணைப்பாளர்களின் பதவிகள் காலாவதியாகி விட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் உள்ளாட்சி தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிடும் அதிமுகவினருக்கு கட்சி தலைமைதான் ஏ மற்றும் பி படிவம் வழங்க வேண்டும். அப்போது தான் அவர்கள் இரட்டை இலை சின்ன்தில் போட்டியிட முடியும். ஆனால், தற்போதைய சூழலில் ஏ மற்றும் பி படிவத்தில் யார் கையெழுத்து போடுவார்கள் என்று உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள அதிமுகவினரும், தொண்டர்களும் திக்கு ெதரியாத காட்டில் உள்ளனர். வேட்புமனு தாக்கல், பரிசீலனை முடிந்த நிலையில் நேற்று (30ம் தேதி) மாலை 3 மணி வரை மனுக்களை வாபஸ் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி நேற்று மாலை 3 மணிக்குள் அதிமுக வேட்பாளர்கள் ஏ மற்றும் பி படிவத்தை சமர்பிக்க தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கெடு விதித்திருந்தனர்.

இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று முன்தினம் ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், ‘உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஏதுவாக படிவம் ஏ மற்றும் பி ஆகியவற்றை எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று கூறி இருந்தார். ஆனால் ஓபிஎஸ்சின் இந்த கோரிக்கையை எடப்பாடி நிராகரித்துவிட்டார்.

இதையடுத்து தற்போது தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த மாதம் 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் 510 பதவிகளுக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 50 ஆண்டு பாரம்பரிய கட்சி, பலமுறை தமிழகத்தில் ஆட்சியில் இருந்த ஒரு கட்சியான அதிமுக, தனது வெற்றி சின்னமான இரட்டை இலையில் போட்டியிடாமல் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அதிமுக தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Related Stories: