தமிழ் படங்களில் நடிக்க மறுப்பா?: பிருத்விராஜ் விளக்கம்

சென்னை: பிருத்விராஜ், விவேக் ஓபராய், சம்யுக்தா மேனன் நடித்துள்ள ‘கடுவா’ படம், வரும் ஜூலை 7ம் தேதி தமிழ் மற்றும் மலையாளத்தில் திரைக்கு வருகிறது. இதை முன்னிட்டு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிருத்விராஜ், செய்தியாளர்களிடம் கூறியதாவது: மலையாளத்தில் பல்வேறு புதிய கோணங்களில் திரைப்படங்கள் வெளியாகிறது. ஆனால், பக்கா கமர்ஷியல் மாஸ் படங்களின் வரவு குறைந்துவிட்டது. அந்தக்குறையை நீக்க உருவாக்கப்பட்ட படம்தான், ‘கடுவா’. அதுபோன்ற தியேட்டர் அனுபவம் தமிழ் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படம் தமிழிலும் வெளியாகிறது. தமிழில் நான் மிகவும் குறைவான படங்களில்தான் நடித்துள்ளேன். தற்போது அப்படங்களை பற்றி நினைக்கும்போது, மறக்க முடியாத இனிமையான நினைவுகளாக இருக்கிறது. ‘

மொழி’ போன்ற ஒரு படத்தை தமிழ் சினிமா எனக்கு தந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். என்றாலும், ஏன் நான் அதிகமான தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்கவில்லை என்று கேட்கிறார்கள். காரணம், ‘காவியத்தலைவன்’ படத்துக்கு பிறகு எனக்கு சரியான கதைகள் அமையவில்லை. என்னை மெய்சிலிர்க்க வைக்கக்கூடிய அல்லது நான் இதுவரை நடித்திருக்காத கேரக்டர்கள் அமையவில்லை. பிருத்விராஜ் என்றால் இப்படித் தான் நடிப்பார் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது. அனைவரும் சற்றும் எதிர்பார்க்காத கேரக்டரில் நடிப்பதையே நான் பெரிதும் விரும்புகிறேன். தற்போது சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறேன். விரைவில் புதிய தமிழ் படங்களில் நான் நடிப்பேன்.

Related Stories: