தகுதி உடைய நபர்கள் உரிய காலத்தில் தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்: பொது சுகாதார துறை அறிவுறுத்தல்

சென்னை: தகுதி உடைய நபர்கள் உரிய காலத்தில் தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பொது சுகாதார துறை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும்  தொற்று அதிகரித்து வருகிறது. சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது ஆகியவற்றை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.

மேலும், கடந்த ஜனவரி மாதம் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த 12.1.2022 அன்று தமிழக அரசால் முகக்கவசம் அணியாதவர்களிடம் வசூலிக்கப்படும் அபராத தொகை ரூ.500 ஆக அதிகரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு முகக்கவசம் அணியாத 32,77,119 பேரிடம் ரூ.76,00,87,200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொண்டு முடிவுகள் தெரியும் வரை தங்களை தாங்களே தனியறையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தகுதி உடைய நபர்கள் உரிய காலத்தில் தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: