சென்னை: வளசரவாக்கம் அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் கோயிலில் ரூ.84 லட்சம் செலவில் புதிய திருக்குளம் அமைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை, வளசரவாக்கம் அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் கோயில் திருப்பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், சென்னை மண்டல இணை ஆணையர் ரேணுகாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: வளசரவாக்கம் வேள்வீஸ்வரர் கோயில் குளத்தை 84 லட்சம் செலவில் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. கோயிலுக்கு உண்டான அடையாளத்தோடு மேம்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. மாநகராட்சியும், அறநிலையத்துறையும் இணைந்து குளத்தை கோயில் குளம் போல வடிவமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றோம். அதற்கான வரைபடங்களை தயாரித்து வரும் 10ம் தேதிக்குள் முதல்வரிடம் ஒப்புதல் பெறப்படும். 2006ல் தொடங்கப்பட்ட இந்த கோயிலின் திருப்பணிகள் முடிவுற்று 2010 ல் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.