உயர் கல்வி உறுதி திட்டத்தில் அரசு பள்ளியில் பயின்ற ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் ரூ.1000 உதவி தொகை பெற விண்ணப்பம்: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பயின்ற சுமார் 1 லட்சம்  மாணவிகளுக்கு மேல் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் பொன்முடி கூறினார். சென்னை, தலைமை செயலகத்தில் அரசு பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இரண்டு செமஸ்டர் தொழிற்பயிற்சி வழங்கும் விதத்தில் மேண்டோ (MANDO) ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் அமைச்சர் பொன்முடி முன்னிலையில், உயர் கல்வி துறை அதிகாரிகள் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

இதுகுறித்து அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை தரமணி சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் சான்ட்விச் (sandwich) பாடப்பிரிவு மூன்றரை ஆண்டுகள் நடத்தப்படும். இந்த ஆண்டில் இருந்தே மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால், இன்றைக்கு சான்ட்விச் பாடப்பிரிவு படிக்கும் மாணவர்கள் மூன்றரை வருஷம் படிக்க வேண்டும். மொத்தமுள்ள 7 செமஸ்டரில் 2 செமஸ்டர் மேண்டோ கம்பெனியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. சன்ட்விச் பாடப்பிரிவு படிக்கும் மாணவர்கள் 7 செமஸ்டர்களில் 2 செமஸ்டர்களுக்கு மன்டோ கம்பெனிக்கு சென்று பயிற்சி எடுத்துக்கொள்வார்கள்.

மேலும், 7 செமஸ்டர்களில் 4வது செமஸ்டரும், 7வது செமஸ்டரும் மேண்டோ கம்பெனிக்கே சென்று மாணவர்கள் பயிற்சி பெறுவார்கள். பயிற்சி காலங்களில் மாணவர்களுக்கான விடுதி செலவுகள், படிப்பு செலவுகள் உள்ளிட்ட அனைத்தையும் மேண்டோ கம்பெனியே பார்த்துக் கொள்ளும். உண்மையிலேயே, முதல்வரின் நான் முதல்வன் திட்டத்துக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய வெற்றி என்றுதான் இதை கருத வேண்டும். அந்த அடிப்படையில் இதில் படிக்கும் மாணவர்கள் மேண்டோ கம்பெனியில் வேலை பெறவும் வாய்ப்பு இருக்கிறது. நிறுவனங்களை உருவாக்குவதற்கும் அவர்கள் பயிற்சி அளிக்கிறார்கள்.

முன்னதாக, ஜப்பான் தூதரக தலைவரும் வந்து சந்தித்தார். அப்போது ஜப்பான் பல்கலைக்கழகத்தோடு தமிழகத்தில் இருக்கிற பல்கலைக்கழகங்களுடன் பொருளாதார ரீதியாக தொடர்பு இருந்தாலும், கலாச்சார அடிப்படையில் தொடர்பு இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். தமிழகத்தில் படிக்கிற மாணவர்கள் பெரும்பாலும் ஜப்பான் நாட்டுக்கு தொழில் செய்ய செல்கிறார்கள். இதுவரை இன்ஜினியர், அறிவியல் படித்த மாணவர்கள் ஜப்பான் வருகிறார்கள். ஆர்ட்ஸ் படிக்கும் மாணவர்களும் வர வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வைத்திருக்கிறார்கள்.

அதற்கும் ஏற்பாடு செய்கிறோம் என்று சொல்லி இருக்கிறோம். இரண்டு நாடுகளுக்கு இடையே கலாச்சார தொடர்பும், பொருளாதார தொடர்பும் ஏற்படுவதற்கான எல்லா வழிகளையும் செய்வோம் என்று அவர்களிடம் குறிப்பிட்டிருக்கிறோம். அவர்களும் அதை வரவேற்றிருக்கிறார்கள். ஆகவே, இந்த இரண்டும் இன்று உயர் கல்வி துறை மூலமாக செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உயர் கல்வி உறுதி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பயின்ற கிட்டத்தட்ட 1 லட்சம் மாணவிகளுக்கு மேல் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பித்துள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: