சென்னை: தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 300 பேர் டிபிஐ வளாகத்தில் நேற்று காலை உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் டெட் தேர்வு எழுதினால்தான் அரசு பணியில் சேர முடியும் என்பதால், 2012ம் ஆண்டு மற்றும் 2013ம் ஆண்டில் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன. பின்னர் கடந்த 10 ஆண்டுகளில் தகுதித் தேர்வு முறையாக நடத்தவில்லை. கடந்த ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆட்சியில் பகுதி நேர ஆசிரியர்கள் 16 ஆயிரம் பேர் பள்ளிகளில் நியமிக்கப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதை அரசு திரும்பப் பெறவில்லை. இந்நிலையில், பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப் போவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சுமார் 300 பேர் நேற்று காலை டிபிஐ வளாகத்தில் குவிந்து உண்ணா விரதம் இருந்து வருகின்றனர்.