டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுக்க நடவடிக்கை துணை இயக்குநர்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை: டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம் நடத்த சுகாதார துணை இயக்குநர்களுக்கு, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு மே மாதம் வரை 2,548 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

இதனால் பொது சுகாதாரத் துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட சுகாதார துணை இயக்குநர்களுக்கு, பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: சில மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு பதிவாகி வருகிறது. அடுத்து வரும் மாதங்களில் மழைப் பொழிவு இருக்கும் என்பதால் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் குறித்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், மாவட்ட சுகாதார இயக்குநரகத்துக்கு தகவல் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும். அண்டை மாவட்டங்கள் அல்லது மாநிலங்களில் டெங்கு பரவல் அதிகமாக இருக்கும்பட்சத்தில் அதுகுறித்த விவரங்களை மாவட்ட துணை சுகாதார இயக்குநருக்கு தெரிவிப்பது அவசியம். நோய்களைப் பரப்பும் கொசுக்கள் மற்றும் லார்வா உற்பத்தி குறித்து கண்காணிக்க வேண்டும்.

வீடுகள், பள்ளிகள், பூங்காக்கள், கல்லூரிகள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் தனித்தனியே விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மழை நீர் தேங்காத வகையில் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகித்தல், நிலவேம்பு குடிநீர் விநியோகித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: