அறிவிப்பு வெளியான 6 நாட்களில் பி.இ. படிக்க ஆன்லைனில் 82,000 பேர் விண்ணப்பம்: தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தகவல்

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கிய 6 நாட்களில் 82,327 பேர் விண்ணப்பித்துள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20ம் தேதி வெளியானது. இளநிலை பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு கடந்த 20ம் தேதி தொடங்கியது. அதன்படி இளநிலை பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவில் முதல் நாளில் 18,763 விண்ணப்பித்தனர்.

அதை தொடர்ந்து விண்ணப்ப பதிவு தொடங்கிய கடந்த 6 நாட்களில் 82,327 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 42,902 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். அதேபோல் 19,101 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்கள் தாங்களாகவே விண்ணப்பிக்கலாம் அல்லது தங்கள் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19ம் தேதி கடைசி நாள் என்றும், அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சம வாய்ப்பு எண்ணானது ஜூலை 22ம் தேதி வெளியிடப்படும் என்றும், விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜூலை 20ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும். மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியிடப்படும். இவற்றில் ஏதேனும் குறைகள் இருப்பின் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் சேர விரும்புவோர் //tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். சேர்க்கை குறித்த சந்தேகங்களுக்கு 0462-2912081, 82, 83, 84 & 85, 044-22351014, 044-22351015 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: