சென்னை: சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் நடராஜன் கூறியதாவது:
மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை தங்களது வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக அரசுக்கும், இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கும் இடையே கடந்த மே 31ம் தேதி கையெழுத்தானது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வருடாந்திர உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இருந்து ஓய்வூதியதாரர்களுக்கு மாநில அரசு விலக்கு அளித்து இருந்தது. இந்த ஆண்டு சுமார் 7,15,761 மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் வரும் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கும்படி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.