சென்னையில் மட்டும் 50% கொரோனா பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 24 மணிநேரத்தில் ஏற்படுகிற தொற்றின் சதவீதத்தில் 50% தொற்று பாதிப்பு சென்னையில் மட்டும் ஏற்படுகிறது என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்தில் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ள கஸ்தூரிபா நகர் 3வது பிரதான சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  நேற்று ஆய்வு செய்தார்.பின்னர் அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 24 மணிநேரத்தில் ஏற்படுகிற தொற்றின் சதவீதத்தில் 50% தொற்று பாதிப்பு சென்னையில் மட்டும் ஏற்படுகிற காரணத்தினால் தொடர்ந்து சென்னையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் 112 தெருக்களில் 3 பேருக்கு மேலும், 25 தெருக்களில் 5 பேருக்கு மேற்பட்டவர்களுக்கும் தொற்று பாதிப்பு உள்ளது.  மொத்தமாக சென்னையில் நேற்று  2,225 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

கொரோனா தொற்று பாதித்தவர்களில் 8% பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த 8 % பேரும் மாநகராட்சி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.  வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள போதுமான இடவசதி இல்லாத 5 பேர் மட்டும் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.  கொரோனா தொற்று பாதித்த 2225 பேருக்கும் எந்தவிதமான உயிர் பாதிப்பு இல்லை என்கின்ற நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பாதித்த அனைவருக்கும் காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.  

 கல்வி நிறுவனங்களில் மட்டுமே தொற்றின் பாதிப்பு வேகமாக பரவி வந்தது.  இந்த நிலை முழுவதுமாக தற்பொழுது இல்லை என்றாலும், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு முன்பு அவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற சிறிய அளவிலான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாநகராட்சியின் மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவர்களின் ஆலோசனையை பெறுவது மிகவும் அவசியமானது. சிறிய அளவில் சளி, இருமல் போன்ற பாதிப்பு என்று அலட்சியமாக இல்லாமல் பரிசோதனை மேற்கொண்டால் மற்ற குழந்தைகளுக்கு அந்த பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்.   எனவே, பெற்றோர்கள் இதனைத் கருத்தில் கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Related Stories: