சென்னை: மழைக்கால பேரிடர்களை எதிர்கொள்ள ஆயத்த பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும், போர்க்கால அடிப்படையில் மழைநீர் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறி உள்ளார்.
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில், பரவலாக பெய்து வரும் கன மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள மழை நீரை வெளியேற்றும் பணியை, முதல்வர் உத்தரவின் பேரில் சென்னை மாநகராட்சி உள்பட தொடர்புடைய மாநகராட்சிகளும், மாவட்ட நிர்வாகங்களும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்கள் மழை வெள்ளம் தொடர்பான புகார்களை பதிவு செய்யும் வண்ணம் சென்னையில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்டங்களில் உள்ள மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் கூடுதலான அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.