தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைன் விண்ணப்பபதிவு தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு இன்று தொடங்கியது. ஜூலை 19ம் தேதி கடைசி நாளாகும். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியது. இந்த சூழலில் ஏற்கனவே உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தபடி, இளநிலை பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியது. மாணவர்கள் தாங்களாகவே விண்ணப்பிக்கலாம் அல்லது தங்கள் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

பொறியியல் மாணவர்கள் சேர்க்கை சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்றும், மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் இரண்டு இடங்கள் என்ற அடிப்படையில் 110 மையங்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19ம் தேதி கடைசி நாள் என்றும், அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு சமவாய்ப்பு எண்ணானது ஜூலை 22ம் தேதி வெளியிடப்படும் என்றும், விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜூலை 20ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியிடப்படும். இவற்றில் ஏதேனும் குறைகள் இருப்பின் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பில் சேர விரும்புவோர்  //tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.   சேர்க்கை குறித்த சந்தேகங்களுக்கு 0462-2912081, 82, 83, 84 & 85, 044-22351014,044-22351015 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர், விளையாட்டு வீரர் ஆகிய 3 பிரிவினருக்கும் ஆகஸ்ட் 16 முதல் 18ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.

பொதுக்கல்வி, தொழில்முறைக் கல்வி, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு ஆகிய 3 பிரிவினருக்கு ஆகஸ்ட் 22ம் தேதி முதல் அக்டோபர் 14ம் தேதி வரை நடைபெறும் என்றும்,  துணைக் கலந்தாய்வு அக்டோபர் 15, 16 ஆகிய நாள்களில் நடைபெறும். அருந்ததியர் பிரிவில் காலியாக உள்ள இடங்களில் ஆதிதிராவிடர் பிரிவு வகுப்பினருக்கான கலந்தாய்வு அக்டோபர் 17, 18ம் தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: