சென்னை: எம்டிசி பேருந்துகளில் பயணம் செய்ய சென்னைவாழ் மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன்கள் நாளை மறுநாள் முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில், 60 வயதிற்கு மேற்பட்ட சென்னைவாழ் மூத்த குடிமக்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில், இலவச பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 2022 ஜூன் மாதம் வரை பயணம் செய்யும் வகையில், மூத்த குடிமக்களுக்கு பயண அட்டை மற்றும் டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. அடுத்த அரையாண்டிற்கு, ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்கள் மற்றும் பயண அட்டைகள் 40 மையங்களில், வரும் 21.6.2022 முதல் 31.7.2022 வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படும்.